மத்திய அமைச்சரவை ஒப்புதல்: Free Internet Connection in India

 

பொது இடங்களில் இலவச வைஃபை சேவை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!



பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் போராட்டம், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்தின் முடிவில், பொது இடங்களில் வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. PM WANI என்ற பெயரில் வைஃபை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக நாடு முழுவதும் பொது தரவு மையங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான உரிமம், கட்டணம் அல்லது பதிவு எதுவும் இருக்காது என்றும், இந்த திட்டம் நாட்டில் பொது வைஃபை நெட்வொர்க்குகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை அளிப்பது அதிகரித்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2,000 கோடி டாலர் அளவுக்கு பயன்தரும் என கூகுள் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், ஆத்மநிர்பர் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு ரூ.1584 கோடி ஒதுக்கீடு செய்யவும், கொச்சி - லட்சத்தீவுகள் இடையே ஆப்டிக்கல் ஃபைபர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோல், வடகிழக்கு பிராந்தியத்திற்கான விரிவான தொலைத் தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமின் இரண்டு மாவட்டங்களில் செல்போன் சேவை வழங்குவதற்கான யுஎஸ்ஓஎஃப் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இணைப்பு இல்லாத 2374 கிராமங்களுக்கு செல்போன் சேவை வழங்கப்படும்.

Post a Comment

0 Comments